தி டையிங் டிடக்டிவ் - லீப் ஜி டபள்யூ ஃபர்சன்
ஸ்வீடன் நாட்டு சட்டப்படி ஒரு குற்றம் நடந்து 25 ஆண்டுகள் வரை மட்டுமே குற்றம் செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க முடியும். 25 ஆண்டுகள் கடந்து விட்டால் குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் சட்டப்படி அவனுக்கு தண்டனை அளிக்க முடியாது.
2010 ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள்.......
ஸ்வீடன் நாட்டில் ஓய்வு பெற்ற 67 வயது முன்னாள் காவல் துறை தலைவர் லார்ஸ் மார்டின் ஜோஹான்சன்க்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்படுகிறார். சில நாட்களுக்கு பிறகு நினைவு திரும்புகிறது. கை கால்கள் சரியாக செயல்படாமல் போகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இருப்பினும் ஜோஹான்சன் மருத்துவர்களுக்கு சரியாக ஒத்துழைப்பு தர மறுக்கிறார். முரண்டு பிடிக்கிறார். தகராறு செய்கிறார். இவருடைய ஒத்துழைப்பை பெரும் நோக்கில் அம்மருத்துவமணையில் பணிபுரியும் மருத்துவர் உலிரிகா ஸ்டென்ஹாம் தன்னுடைய தந்தை பணிபுரிந்த சர்ச்சில், 25 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட யாஸ்மின் எர்மெகன்னை கொன்றது யார்? என்று தனக்கு தெரியும் என சொல்லி ஒரு பெண் பாவ மன்னிப்பு கேட்டார் என கூறி விட்டு இறந்துவிட்டார் என்ற தகவலை சொல்கிறார்.
1985 ஆம் ஆண்டின் ஜீன் மாதத்தில் ஸ்வீடன் நாட்டின் புகழ் பெற்ற மருத்துவர் ஜோசப் சிமோன் - பாடகி மார்கரெத்தா சாகர்லெய்ட் தம்பதியரின் ஒரே மகள் ஒன்பது வயதுடைய யாஸ்மின் எர்மெகன், மார்கரெத்தா சாகர்லெய்ட்டின் பங்களா வீட்டில் கொலை செய்யப்பட்டாள். மார்கரெத்தா சாகர்லெய்ட் பாடல் கச்சேரிக்காக தன்னுடைய உறவினர் வெரா நீல்சானுடன் வெளிநாடு சென்றிருந்தாள். ஜோசப் சிமோன் ஆய்வகத்தில் தங்கி இருந்தார். தலையணையால் அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என தன்னுடன் பணியாற்றிய நண்பர்கள் மூலம் அறிந்து கொள்கிறார் ஜோஹான்சன்.
ஒரு சில வாரங்களுக்கு பிறகு வீட்டிலேயே மருத்துவ பணியாளரின் உதவியுடன் இருக்கிறார் ஜோஹான்சன். உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. இருப்பினும் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைகிறார். கொலையை விசாரித்த காவல் அதிகாரி எவெர்ட் பெக்ஸ்ட்ரம் ஆகும். இவர் எந்த வழக்கையும் ஒழுங்காக விசாரிக்கமாட்டார் என காவல் துறையில் உள்ள அனைவரும் அறிவர். கொஞ்சம் முரடர். இருப்பினும் இவரது விசாரணை அறிக்கையை முழுமையாக படித்துப்பார்க்கிறார்.
விசாரணை அறிக்கையின்படி கொலை நடந்த இடத்தில் எந்த தடையங்களும் கிடைக்கவில்லை. கொலையான நேரத்தில் வீட்டில் வேலைக்காரி மட்டுமே இருந்திருக்கிறார். வீட்டிற்கு யாரும் வரவில்லை. வேலைக்காரியின் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ரொம்ப நல்ல பெண், யாஸ்மின் மீது மிகுந்த அன்பு கொண்டவர். சமீபத்தில்தான் மரணமடைந்திருக்கிறார்.
டிஎன்ஏ டெஸ்ட் போன்ற அதிநவீன சோதனைகள் எதுவும் அந்த காலகட்டத்தில் இல்லை. எந்த துப்பும் கிடைக்கவில்லை, யாரையும் கைது செய்யவில்லை. வழக்கு முடிவுக்கு வரவில்லை. எனவே இந்த வழக்கு காவல் துறையினருக்கு ஒரு கரும்புள்ளியாகவே இன்றுவரை இருந்து வருகிறது. தற்போது யாஸ்மினின் தாய் மார்கரெத்தா சாகர்லெய்ட் உயிருடன் இல்லை. கொலை நடந்த அந்த வீடு மார்கரெத்தாவின் உறவினர் வெரா நீல்சானுக்கு சொந்தமாகிறது.
தன்னுடன் பணியாற்றிய ஓய்வு பெற்ற காவல்துறையினர் மூலம் இப்போது ஏதாவது சாட்சி தடயம் கிடைக்கிறதா என விசாரிக்கிறார். புதிதாக சாட்சிகளோ தடயங்களோ எதுவும் கிடைக்கவில்லை. விசாரணை அறிக்கையை படித்ததிலும் புது கருத்தும் பார்வையும் எழவில்லை. எனவே ஜோஹான்சன் அந்த பெண் மருத்துவர் தன்னுடைய ஒத்துழைப்பை பெரும் நோக்கில் பொய் சொல்லி இருக்கலாம் என நினைக்கிறார்.
ஒருநாள் ஜோஹான்சன் வழக்கமான தன்னுடைய மருத்துவ செக்கப்புக்காக உலிரிகா ஸ்டென்ஹாம்மிடம் செல்கிறார். அப்போது உலிரிகா தன்னுடைய அப்பாவின் பொருட்களிலிருந்து ஹேர்பேன்ட் ஒன்றை கண்டுபிடித்ததாக கொடுக்கிறார். அதில் சில முடிகள் இருப்பதையும் காட்டுகிறார். இந்த முடிகளை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க அனுப்புகிறார் ஜோஹான்சன். இந்த ஹேர்பேன்ட்டும் அதிலிருந்த முடிகளும் யாஸ்மினுடையது என நிரூபணமாகிறது.
அப்படியானால் உலிரிகா சொன்னது உண்மை. கொலைகாரன் இன்னும் உயிருடன்தான் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவனை கண்டுபிடிக்க வேண்டும் என நினைக்கிறார் ஜோஹான்சன். முதலில் ஹேர்பேன்ட் எப்படி உலிரிகாவின் தந்தைக்கு கிடைத்தது என தன்னுடைய முன்னாள் சககாவல் துறை நண்பர்களை கொண்டு விசாரிக்கிறார். விசாரணையில் ஒருசில தகவல்கள் கிடைக்கிறது. அதாவது கொலை நடந்த அன்று யாஸ்மினின் தந்தை ஆய்வகத்தில் இல்லை என்றும் உலிரிகாவுடன் தங்கி இருந்திருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. மேலும் கொலை நடந்த அன்று யாஸ்மினின் வீடு இருந்த தெருவில் ஒரு சிகப்பு வண்ண கார் நின்றிருந்ததை பார்த்ததாக விசாரணை அறிக்கையில் உள்ளது. அந்த கார் யாருடையது என தற்போது விசாரிக்கின்றனர்.
யார் அந்த கொலைகாரன்? கொலைகாரனை கண்டுபிடித்தாலும் சட்டப்படி அவனுக்கு தண்டணை பெற்று தர முடியாது. ஏனெனில் குற்றம் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. மற்றொருவரின் உதவியில்லாமல் வாழ முடியாத மருந்துகளின் மூலம் உயிர் வாழ்கிற ஓய்வு பெற்ற காவல் தலைவர் கொலைகாரனை எப்படி கண்டுபிடிக்கிறார். சட்டப்படி அவனுக்கு தண்டணை வாங்கிக் கொடுக்கிறாரா? இவரே அவனுக்கு தண்டைணை கொடுக்கிறாரா? உலிரிகாவுக்கு என்ன ஆனது? யாஸ்மினின் தந்தை என்ன செய்யப்போகிறார்? போன்ற கேள்விகளுக்கு டிராவிடின் டெஸ்ட் இன்னிங்ஸ் வேகத்தில் விடை தருகிறார் நாவலாசிரியர்.
- லார்ஸ் மார்டின் ஜோஹான்சன்- ஸ்வீடன் நாட்டின் தேசிய குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் பாதுகாப்பு பணியின் ஓய்வு பெற்ற தலைவர்.
- உலிரிகா ஸ்டென்ஹாம்- மருத்துவர். ஜோசப் சிமோனின் முன்னாள் காதலி.
- யாஸ்மின் எர்மெகன்- ஜோசப் சிமோனின் ஒன்பது வயது மகள்.
- ஜோசப் சிமோன்- யாஸ்மின் எர்மெகனின் தந்தை. மருத்துவர். அமெரிக்காவில் குடியேறியவர். உலகம் முழுதும் பெரும் செல்வாக்கு உடையவர். கோடீஸ்வரர்.
- மார்கரெத்தா சாகர்லெய்ட்- பாடகி. ஜோசப் சிமோனி-ன் முதல் மனைவி. யாஸ்மின் எர்மெகனின் தாய்.
- ஸ்ட்டப்ஃபான் நீல்சான்- மார்கரெத்தா சாகர்லெய்ட்டின் உறவினர் வெரா நீல்சானின் மகன். மார்கரெத்தா சாகர்லெய்ட்டின் பங்களா விற்ற பணம் இவனுக்கே வந்தது.
- எவெர்ட் பெக்ஸ்ட்ரம்- முதலில் வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி