*CRIME*THRILLER*
இன்ஸ்பெக்டர் வெலாந்தர் சீரிஸ்.
1991 ஆம் ஆண்டு வெளியான ஸ்வீடன் நாட்டு ஹென்னிங் மாங்கெல் அவர்களின் நாவல் தான் FACELESS KILLERS. வெலாந்தர் சீரிஸின் முதல் நாவல்.
ஸ்வீடன் நாட்டின் ஈஸ்டாட் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கள் பண்ணை வீட்டில் வாழ்ந்து வரும் வயதான தம்பதியர்கள் மரியா, ஜோகன்னஸ் லுவ்கிரென். இவர்கள் ஒரு நாள் இரவு தங்களை காப்பாற்றும்படி போலிசுக்கு தொலைபேசியில் தகவல் அளிக்க, அங்கே வருகிறார் இன்ஸ்பெக்டர் குர்த் வெலாந்தர். பண்ணை வீட்டிற்கு வந்து பார்த்தால் ஜோகன்னஸ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுகிடக்கிறான். அவனது மனைவி மரியாவோ கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.
மருத்துவமணையில் சேர்க்கப்பட்ட மரியா இறப்பதற்கு முன் "FOREIGN" என்ற ஒரே வார்த்தையை மட்டுமே கூறுகிறார். இது எப்படியோ வானொலி மற்றும் தொலைக்காட்சியில் வெளியாகிறது. இதனால் மக்கள் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்கள்தான் இந்த கொலைகளை செய்தனர் என அவர்கள் மீது தாக்குதல் நடத்த பெரும் கலவரம் உண்டாக்கிறது. இதனால் அரசு இவ்வழக்கை தனிகவனம் செலுத்தி விசாரிக்க உத்தரவிடுகிறது.ஏற்கனவே மனைவியிடமிருந்து விவாகரத்து, இளம் வயது மகள், நோய்வயப்பட்ட தந்தை என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் வெலாந்தர் இதற்கு பிறகு இவ்வழக்கில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.
தீவிர விசாரணையில் ஜோகன்னஸ் கொலை செய்யப்பட்ட அன்று வங்கிக்கு சென்று வந்தது தெரிய வருகிறது. வங்கியில் விசாரிக்க, லுவ்கிரென் பெரும் தொகை ஒன்றை கொலை செய்யப்பட்ட நாளில் வங்கியிலிருந்து எடுத்திருக்கிறார் எனவும் இதற்கு முன் பலமுறை வேறொரு வங்கி எண்ணிற்கு பணம் அனுப்பி இருக்கிறார் எனவும் தெரிய வருகிறது. அந்த வங்கி எண் யாருடையது? என ஆராயும்போது அது அவரின் முன்னாள் காதலி என்றும் இவள் மூலம் ஜோகன்னஸ்க்கு ஒரு மகன் உள்ளான் எனவும் அந்த மகன் சூதாடி எனவும் அவன் சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் பணப்பிரச்சனையில் பல தவறான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறான் எனவும் சமீபத்தில் அக்கடனை முழுவதும் அடைத்து விட்டதையும் வெலாந்தர் அறிகிறார். எனவே ஜோகன்னஸின் மகன்தான் பணத்திற்காக இக்கொலைகளை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகப்படுகிறது.
இதனிடையே சோமாலிய நாட்டு குடியேறி ஒருவர் முன்னாள் காவல்துறை அலுவலரால் சுட்டு கொலை செய்யப்படுகிறார். கலவரம் முற்றுகிறுது. எனவே வழக்கு விசாரணையை மேலும் தீவிரப்படுத்துகிறார் வெலாந்தர். கொலைகாரனாக சந்தேகிக்கப்படும் ஜோகன்னஸின் மகனை பிடித்துவிட்டால் இவ்வழக்கு முடிவுக்கு வரும் என்றும் அதனால் கலவரம் நின்று அமைதி திரும்பும் என்றும் போலீஸ் நம்புகிறது.
ஜோகன்னஸின் மகனை போலீஸ் தீவிரமாக தேடி கண்டுபிடிக்கிறது. அவனை விசாரிக்கையில் தான் தனது அப்பாவை கொலை செய்யவில்லை எனவும் சூதாட்டத்தினால் ஏற்பட்ட கடனை தனது காரை விற்று அடைத்ததாகவும் தனது தந்தை இறந்த அன்று இரவு தான் வேறொரு இடத்தில் தங்கி இருந்ததாகவும் அங்கே இருந்தவர்கள் அதை உறுதிபடுத்துவார்கள் எனவும் கூறுகிறான். உறுதியும்படுத்துகிறார்கள். வழக்கில் மீண்டும் தொடக்கப் புள்ளிக்கே வந்துவிட்டதை உணர்கிறார் வெலாந்தர். முதலிலிருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டும்.
யார் இந்த கொலைகளை செய்தது?
அவ்வளவு பெரிய தொகையை யார் கொள்ளையடித்தது?
பணத்திற்காகதான் இவ்வளவு கொடுரமான கொலைகளா?
கொலைக்கான காரணம் என்ன?
மரியா இறப்பதற்கு முன் ஏன் ஃபாரின் என சொன்னார்?
எந்த கேள்விக்கும் விடை கண்டறிய முடியவில்லை. யார் மீதும் சந்தேகம் எழவில்லை. ஆறு மாதங்களாக வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்படியே சென்றால் வழக்கை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை.
**SPOILER ALERT**
ஒருநாள் வெலாந்தர் தன்னிடமுள்ள நார்வே நாட்டு பணத்தை மாற்றுவதற்காக வங்கிக்கு செல்கிறார். ஒரே கவுன்டர் மட்டும் உள்ளதால் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார். அவ்வரிசையில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகளும் தங்கள் பணத்தை மாற்ற வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் இத்தாலி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் பேசிக்கொண்டனர். வெலாந்தருக்கு முன் இருந்தவர் மிக அதிகமான பணத்தை வங்கியிலிருந்து எடுத்தார். அதை பார்த்ததும் வெலாந்தர் அங்கிருந்து அவசரமாக கிளம்பி ஜோகன்னஸ் பணம் எடுத்த அன்று பணியிலிருந்த ஊழியரை தேடி சந்திக்கிறார். அப்பணியாளர் ஜோகன்னஸ் பணம் எடுத்த அன்று அவர் தனியாகதான் வந்ததாகவும் அப்போது வங்கியில் யாருமில்லை எனவும் பலமுறை சொல்லியிருந்தார். இப்போதும் அப்பணியாளர் அவ்வாறே சொல்கிறார். ஆனால் வெலாந்தர் இப்போது கேட்ட கேள்வி ஜோகன்னஸ்க்கு அடுத்து யார் பணம் எடுக்க வந்தது? இரு சுற்றுலா பயணிகள் வந்ததாக வங்கி பணியாளர் சொல்கிறார். இங்கே தான் ஒட்டு மொத்த வழக்கின் முடிச்சுகளும் அவிழ்கிறது.
**சுற்றுலா பயணிகள் ஜோகன்னஸ் பணம் எடுப்பதை பார்த்து அவரை பின் தொடர்ந்து சென்று, இரவு வரை காத்திருக்கின்றனர். தனியான பண்ணை வீடு என்பதால் வீட்டிற்குள் தைரியமாக புகுந்து தம்பதியரை கொடூரமாக தாக்கி பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார்கள்.**
வங்கியில் அக்கொலைகாரர்கள் கொடுத்த படிவத்தில் இருந்த கையெழுத்தைக் கொண்டு அவர்களை கண்டுபிடித்து கைது செய்கிறார் வெலாந்தர்.
மிகச்சிறந்த த்ரில்லர். கடைசி அத்தியாயம் வரை விருவிருப்பாக செல்லக்கூடிய நாவல்.